தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அடுத்த திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவ புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் திருமணி தம்பதிகள். இவர்களது மகன் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் பின்புறத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றுள்ளனர்.
மாணவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், சட்டை பையில் கடிதம் இருந்ததாக கூறினர். அதில் கூறப்பட்டதாவது, என் சாவுக்கு பள்ளி ஆசிரியைகள் பியூலா, மேரி, வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியை சத்யா ஆகியோர் தான் காரணம் என்று எழுதி இருந்தது. கடிதத்தின் அடிப்படையில் திருச்செந்தூர் போலீஸ் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்தது தெரிய வந்தது.
மன உளைச்சலில் இருந்த மாணவனை ஆசிரியர்கள் அவதூறு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியின் விசாரணை நடத்தியதில் ஆசிரியைகள் மாணவனை தரக்குறைவாக பேசியது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் உட்பட மாணவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஆசிரியைகளை பள்ளி மேலாளர் பணியிடை நீக்கம் செய்தார்.
மாணவன் உயிரிழந்ததை அடுத்து பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் கூறியதாவது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டு திரும்பினர்.