ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சரக்கு வாகனத்தில் 173 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்த முயன்ற போது மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசிப்பட்டினம், மோர்ப்பண்ணை, சோழியாக்குடி, தொண்டி, மணக்குடி போன்ற இடங்களில் இருந்து இலங்கைக்கு நாட்டு படகின் மூலமாக கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் தேவிபட்டினம் மரைன் போலீசார் மணக்குடி அருகே ஓடக்கரை முனியப்பன் கோவில் பின்புறத்தில் உள்ள கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்துள்ளனர். ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமான வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது வந்த சரக்கு வாகனம் ஒன்றில் மூன்று சாக்கு மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ராஜமாணிக்கம் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், விசாரித்தபோது கடல் வழியாக நாட்டு படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்களை கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளார் ராஜமாணிக்கம். இன்னும் சில கஞ்சா பொட்டலங்கள் மணல்மேடு பகுதியிலுள்ள வீட்டில் உள்ளதாக தகவல் கிடைத்தது.
தொடர்ந்து விசாரணையில் சரக்கு வாகனத்தில் இருந்து 90 கிலோ கஞ்சா மற்றும் வீட்டில் பறிமுதல் செய்த 83 கிலோ கஞ்சா போன்றவற்றை தேவிப்பட்டினம் மரைன் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட 173 கிலோ கஞ்சாவின் மொத்த விலை மதிப்பு ரூ 26 லட்சம் இருக்கும் என யூகிக்கப்பட்டு தெரிவித்தனர் போலீசார்.