சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் சில நாட்களில் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 2 நாட்களுக்குள் வீசத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, வரும் 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தீபாவளி பண்டிகை அன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 48 மணி நேரத்தில் வீச ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை 11 ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை என ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு அதிகப்படியாக இருக்காது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழை தொடங்க உள்ளதை தொடர்ந்து நாளை முதல் ஒரு வாரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் அதிகாலை நான்கு மணி முதல் காலை ஏழு மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


