புதுச்சேரி: புதுச்சேரியில் முதலியார்பேட்டை, திருவிக நகரை சேர்ந்த சார்லஸ் என்பவர். இவருக்கு 42 வயது. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் சார்லஸ் என்பவர் வெங்கட் நகர் ரெயின்போ நகர் பூங்கா அருகே உள்ள தனியார் வெளிநாட்டு வேலை நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
தனியார் வெளிநாட்டு வேலை நிறுவனத்தின் மேலாண இயக்குனராக இருப்பவர் விஷ்வா கார்த்திக். பொது மேலாளராக இருப்பவர் ஹேமமாலினி. உரிமையாளர்கள் ஜெயா அஸ்வதா ஆகியோர். அந்நிறுவனத்தை தொடர்பு கொண்ட சார்லஸ் விசாரித்த போது கனடாவில் வேலை இருப்பதாக கூறியுள்ளனர். வேலைக்காக விசா செயலாக்க கட்டணம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் உரிமையாளர்கள்.
அதன்படி 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார் சார்லஸ் . வேலைக்காக அனுமதி கேட்டு கடிதம் ஒன்று கனட நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும், சுற்றுலா விசா மூலம் கனடாவுக்கு அனுப்பி உள்ளனர். கனடா சென்று சார்லஸ் வேலை தருவதாக கூறிய அந்த நிறுவனத்தை தேடியுள்ளார். தேடிய போது அவர்கள் கூறிய நிறுவனமானது அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
சார்லஸ் புதுச்சேரிக்கு திரும்பி உள்ளார். புதுச்சேரி திரும்பிய சார்லஸ் கனடாவின் வேலை வாங்கி தருவதாக ரூ. 7,50,000 மோசடி செய்த தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி பெரியக்கடை போலீசார் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விஷ்வா கார்த்திக், பொது மேலாளர் ஹேமமாலினி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.