கிரிக்கெட்: தற்போது இரண்டு மாதங்களில் மட்டும் ஆறு முக்கிய வீரர்கள் ஓய்வு அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்து வரும் நிலையில் இன்று காலை மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இவருக்கு 29 வயது மட்டுமே ஆகும் நிலையில் குறைந்து வயதிலேயே அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதத்திலிருந்து இதுவரை ஆறு வீரர்கள் தனது ஓய்வை அறிவித்துள்ளனர். மே 7ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மே 12ஆம் தேதி இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். மே 23ஆம் தேதி ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வை அறிவித்தார். அதே நாளில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க அணியின் ஹென்றிச் கிளாசன் அறிவிப்பை வெளியிட்டார். இன்று காலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர் நிக்கோலஸ் பூரன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்து வீரர்கள் ஓய்வு பெறுவதால் கிரிக்கெட் எதை நோக்கி பயணிக்கிறது என ரசிகர்களுடைய பெரும் கேள்வி எழுந்துள்ளது. அதுவும் குறைந்த வயதில் சில வீரர்கள் ஓய்வு பெறுவதால் பணத்திற்காக விளையாடுகிறார்கள் அதனால் தான் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச போட்டியில் இருந்து விலகுகிறார்கள் என்று கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றன.


