சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வம் (70), ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. அவரது மனைவி சண்முகவள்ளி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தந்தையுடன் 23 வயது மகன் தமிழன் மற்றும் பள்ளியில் படிக்கும் இன்னொரு மகன் வசித்து வருகின்றனர். செல்வம் தனது வாழ்க்கையைப் புதிதாக அமைக்க விரும்பி, 70வது வயதில் இரண்டாவது திருமணம் செய்ய விருப்பம் காட்டி வரன் தேட ஆரம்பித்தார். இதற்காக சில இடங்களில் தனது விபரங்களை அனுப்பி, குடும்பத்தை மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டார் என்று தெரிகிறது.
இது மகன் தமிழனுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. “முதலில் எனக்கு திருமணம் செய்து வை, பிறகு உனக்கு” என்று தந்தையிடம் தமிழன் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை என்றும், தனக்கு முன்பே இரண்டாவது வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், வீட்டில் பண விஷயங்கள், மற்றும் கடை செலவுகள் தொடர்பாகவும் தந்தை-மகன் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் தந்தை பண உதவி செய்ய மறுத்ததால் தமிழன் கோபம் கொண்டு குடும்பத்தில் பிரச்னை எழுப்பியதாகவும் தெரிகிறது. நேற்று காலை, “நீ ஏன் இந்த வயதில் திருமணம் செய்கிறாய்?” என்ற கேள்வியில் இருந்து தகராறு உச்ச கட்டத்தை அடைந்தது. கோபத்தில் தமிழன் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தையின் தலையில் பலமாய் அடித்தார். அதனுடன் கத்தியால் கழுத்தில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் செல்வம் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து செல்வத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சையை வழங்கி வருவதாகவும், நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே சமயம், தமிழனையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போலீசார், தந்தையை தாக்கிய குற்றச்சாட்டில் தமிழனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.