துபாய், செப்டம்பர் 10, 2025: அடுத்த ஆண்டு (2026) நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை, இந்தியா மற்றும் இலங்கையில் நடத்துவது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த பிரமாண்ட தொடர், பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள 7 மைதானங்களில் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய 5 மைதானங்களும், இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய 2 மைதானங்களும் தேர்வு செய்யப்படலாம்.
பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இறுதிப் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 15 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இம்முறை டி20 உலகக் கோப்பை தொடர், 20 அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும். பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடத்தப்படுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


