கின்சாஹா: வடமேற்கு காங்கோவில் இந்த வாரத்தில் மட்டும் இரண்டு படகுகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் ஏறத்தாழ 193 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் காணாமல் போனதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த இரண்டு விபத்துகளும் ஈக்குவேட்டர் மாகாணத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. புதன்கிழமை மோட்டார் படகு விபத்துக்கு உள்ளானதில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான பயணிகள் மாணவர்கள் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை அரசு தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை லுகோலேலா பகுதிக்கு அருகே காங்கோ ஆற்றில் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த படகு விபத்தானது. படகில் திடீரென தீ பிடித்ததால் நீரில் மூழ்கியது. இதில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. விபத்தின் போது 209 பேரை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டு உள்ளனர். இரு வேறு படகு விபத்துகளில் சிக்கி மொத்தம் 193 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்த எந்த தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என கூறப்படுகிறது. காங்கோவில் சாலை வழி பயணத்திற்கு ஆகும் செலவை விட படகு வழி பயணம் மலிவாக உள்ளதால் ஏராளமான படகு வழியாக பயணிக்கின்றனர்.


