மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து ஆலோசனை செய்ய உள்ளனர். கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றார்.
பதவியேற்றதை தொடர்ந்து இந்தியாவில் வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தவகையில் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்று இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக ஒப்பந்தம் முன்னேற்றம் குறித்து கையெழுத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்கள், விமானத்தின் உதிரி பாகங்கள், விஸ்கி மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகிய பொருட்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவில் ஜவுளி, மருந்துகள், தேயிலை, நகைகள், அரிசி, உணவு பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களின் விலையும் இங்கிலாந்தில் விலை குறைக்கப்படும். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னேற்றம் குறித்து இங்கிலாந்து பிரதமர் இந்தியா சுற்றுப்பயணமாக 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி நேற்று காலை மும்பை வந்தடைந்த போது மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் வரவேற்பளித்தார். இங்கிலாந்து பிரதமருடன் கல்வியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என 125 பிரதிநிதிகளுடன் வருகை புரிந்துள்ளார். இன்று பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் மும்பையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மும்பையில் நடைபெற்று வரும் சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் 2030 ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


