தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 14 வயதே ஆன பீகார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுஷ் மத்ரேவுக்கு என்ன ஆச்சு: இந்திய U19 அணியின் வழக்கமான கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் துணை கேப்டன் விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் மணிக்கட்டு காயம் (Wrist Injuries) காரணமாகத் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜாக்பாட்: கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவருமே காயமடைந்ததால், சமீபத்தில் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் ஏலத்திலும் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் பதவி தேடி வந்துள்ளது.
தென்னாப்பிரிக்கத் தொடரில் ஆரோன் ஜார்ஜ் துணை கேப்டனாகச் செயல்படுவார்.
வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் அதிரடி காட்டி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை நிலை என்ன தென்னாப்பிரிக்கத் தொடருக்கு வைபவ் கேப்டனாக இருந்தாலும், 2026 U19 உலகக் கோப்பையில் ஆயுஷ் மத்ரேவே கேப்டனாகச் செயல்படுவார் என பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்த பிறகு அவர் மீண்டும் அணியுடன் இணைவார்.


