மதுரையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சௌராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது அந்தச் சமூக மக்களின் உரிமைகள் மற்றும் தமிழக அரசியலில் அவர்களின் முக்கியத்துவம் குறித்து அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
மற்ற கட்சிகளுக்கு வந்த அச்சம்: மாநாட்டில் பேசிய சீமான், “இந்த மாநாட்டில் நான் பங்கேற்றதால், சௌராஷ்டிர சமூகத்தினர் அனைவரும் சீமானுக்கே ஓட்டுப் போடுவார்கள் என்ற அச்சம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு இப்போது வந்திருக்கும். அந்த அச்சத்தின் காரணமாகவே, தமிழ்நாட்டில் இனி இந்தச் சமூகத்தினருக்கு மற்ற அரசியல் கட்சியினர் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்குவார்கள். இதுவே உங்கள் சமூகத்திற்கு கிடைத்த முதல் வெற்றி,” எனத் தெரிவித்தார்.
அரசியல் அங்கீகாரம்: மேலும் அவர் பேசுகையில், “காலம் காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் சௌராஷ்டிர மக்கள், தங்களின் அரசியல் அங்கீகாரத்திற்காகப் போராட வேண்டிய நிலை இருப்பது வருத்தமளிக்கிறது. உங்களைப் வெறும் ஓட்டு வங்கியாகப் பார்த்தவர்கள், இனி உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். உங்கள் உரிமைகளுக்காக நாம் தமிழர் கட்சி என்றும் துணை நிற்கும்,” என உறுதி அளித்தார்.
வியூகத்தை மாற்றும் சீமான்: சிறுபான்மையினர் மற்றும் குறிப்பிட்ட சமூக வாக்குகளைக் குறிவைத்து சீமான் தனது பரப்புரை வியூகத்தை மாற்றி வருவதன் ஒரு பகுதியாகவே இந்த மாநாட்டுப் பேச்சு பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி கொண்ட சௌராஷ்டிர சமூகத்தினரைத் தனது பக்கம் ஈர்க்க சீமான் போட்ட கணக்கு, பெரிய கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் இந்த ‘அச்சம்’ குறித்த பேச்சு, வரும் 2026 தேர்தலில் சௌராஷ்டிர சமூக மக்களின் வாக்குகள் எந்தப் பக்கம் திரும்பப் போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


