பியோங்யாங் / டோக்கியோ: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துச் சென்ற சம்பவத்தால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா, இன்று அதிகாலை தனது கிழக்குக் கடற்பரப்பை நோக்கி அடுத்தடுத்து பல ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளைப் பதற்றமடையச் செய்துள்ளது.
ஜப்பான் உறுதிப்படுத்திய அதிர்ச்சி: வடகொரியாவின் இந்தப் ‘பயமுறுத்தல்’ நடவடிக்கையை ஜப்பான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இது குறித்துக் கூறுகையில், “வடகொரியா ஏவிய ஏவுகணைகள் சுமார் 900 முதல் 950 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து கடலில் விழுந்தன. இது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல்” எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு விடப்பட்ட மிரட்டலா? இந்த ஏவுகணைத் தாக்குதல் நடந்த அதே நேரத்தில், தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) சீனாவிற்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், சீனா – தென்கொரியா உறவை வடகொரியா விரும்பவில்லை என்பதையே இந்த ஏவுகணைகள் காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். “எங்களை மீறி தென்கொரியாவுடன் நெருக்கம் காட்டாதீர்கள்” எனச் சீனாவுக்கும், “மதுரோவுக்கு நடந்தது எங்களுக்கு நடக்காது” என அமெரிக்காவுக்கும் ஒரே நேரத்தில் கிம் ஜோங் உன் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: வெனிசுலா அதிபரை அமெரிக்கா தூக்கியது, கிம் ஜோங் உன்னிற்கு ஒரு வித பயத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதம் இல்லாத ஒரு நாட்டின் அதிபருக்கு என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா காட்டிவிட்டதால், தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை பலத்தை உலகுக்கு நிரூபிக்க வடகொரியா இந்தச் சமயத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
பதற்றத்தில் கொரிய தீபகற்பம்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தங்கள் ராணுவத்தை உஷார்படுத்தியுள்ளன. 2026-ன் தொடக்கத்திலேயே அமெரிக்கா ஒரு பக்கம், வடகொரியா ஒரு பக்கம் என உலக நாடுகள் மீண்டும் ஒரு ‘பனிப்போர்’ (Cold War) சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.


