ஆண்களின் மனதையும் படிக்க முடியாது உச்ச நீதிமன்ற கருத்தை ஆண்களுக்கு எதிராகத் திருப்பிய ரம்யா வெடித்தது புது சர்ச்சை
பெங்களூரு: தெருநாய்கள் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தது. அதில், “நாய் எப்போது கடிக்க வரும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் அறிய முடியாது” என்று குறிப்பிட்டிருந்தது. இந்தக் கருத்தைச் சமூகப் பிரச்சினையோடு ஒப்பிட்டு நடிகை ரம்யா எழுப்பியுள்ள கேள்வி இப்போ பேசுபொருளாகியுள்ளது.
ரம்யாவின் வாதம்: ரம்யா தனது பதிவில் கூறியிருப்பதாவது: “நாயின் மனநிலையைப் படிக்க முடியாது, அதனால் அது எப்போது கடிக்க வரும் எனத் தெரியாது என்று நீதிமன்றம் சொல்கிறது. அதே லாஜிக்கை ஆண்களுக்கும் பொருத்தலாமே? ஒரு ஆணின் மனதையும் யாராலும் படிக்க முடியாது. அவன் எப்போது ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்வான் அல்லது எப்போது கொலை செய்வான் என யாருக்கும் தெரியாது. அப்படியானால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சை ஏன்?
ஆண்கள் எதிர்ப்பு: “குற்றவாளிகளை ஒட்டுமொத்த ஆண்களோடு ஒப்பிடுவது தவறு” என்றும், “நாய்களோடு ஆண்களை ஒப்பிடுவதா?” என்றும் பல ஆண்கள் ரம்யாவின் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆதரவு குரல்: அதே சமயம், பெண்கள் சந்திக்கும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டவே அவர் இப்படி ஒரு ‘Extremist’ கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்று ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் பின்னணி: ரம்யா ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பதால், அவரது இந்த கருத்து அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, “பெண்ணியம் என்ற பெயரில் ஆண்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்புகிறாரா?” என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.


