புது டெல்லி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைத் துறை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள விவகாரம், பெரும் அரசியல் போராக வெடித்துள்ளது. இந்தத் தடையின் பின்னணியில் பாஜக இருப்பதாக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குரல் ஒடுக்கப்படவில்லை: “பாஜக யாருடைய குரலையும் ஒடுக்கவில்லை. கருத்து சுதந்திரத்திற்கு நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கிறோம். ஜனநாயகன் விவகாரத்தில் சட்ட ரீதியான நடைமுறைகளே நடக்கின்றன” என குரு பிரகாஷ் பாஸ்வான் விளக்கம் அளித்துள்ளார்.
ராகுல் காந்திக்குத் தகுதியில்லை: “எமர்ஜென்சி (அவசர நிலை) காலத்தில் ஊடகங்களையும், படைப்பாளிகளையும் ஒடுக்கிய காங்கிரஸின் வழித்தோன்றல் ராகுல் காந்தி, இன்று கருத்து சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. தமிழர் நலன் குறித்து பாஜகவுக்குச் சான்றளிக்க ராகுல் காந்திக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.”
பிரதமரின் தமிழ் பற்று: “பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு. அதனால்தான் காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறார். தமிழகத்திற்குப் பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.”
பின்னணி: விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் மத்திய அரசை விமர்சிப்பதாகக் கூறி, படத்திற்கு சென்சார் வழங்கத் தணிக்கை வாரியம் மறுத்தது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றமும் தடை விதித்துள்ள நிலையில், பொங்கல் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.


