டாவோஸ் (சுவிட்சர்லாந்து): உலகப் பொருளாதார மாநாட்டில் (WEF) பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஒப்பந்தம் நெருங்கிவிட்டது: “ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளுமே இந்த மாரத்தான் போரால் சோர்வடைந்துவிட்டன. புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவருமே ஒரு சுமுகமான ஒப்பந்தத்தைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள். விரைவில் ஒரு பெரிய அமைதி ஒப்பந்தம் (Peace Deal) கையெழுத்தாகும்.”
அசாதாரண வெறுப்பு: புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே தனிப்பட்ட ரீதியாக மிகப்பெரிய வெறுப்பு (Extraordinary Hatred) இருப்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப், “இந்த வெறுப்பு போர் நிறுத்தத்தைக் கடினமான ஒன்றாகக் காட்டினாலும், பேச்சுவார்த்தை மேஜையில் அமரும்போது அவர்கள் இருவரும் முட்டாள்கள் அல்ல என்பதை உணர்வார்கள். ஒரு ஒப்பந்தத்தைச் செய்யாவிட்டால் அவர்கள் ‘முட்டாள்கள்’ என்றே அழைக்கப்படுவார்கள்” எனத் தனது பாணியில் அதிரடியாகக் கூறியுள்ளார்.
28 அம்சத் திட்டம்: அமெரிக்கா ஏற்கனவே 28 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதில் கிரிமியா மற்றும் டான்பாஸ் பகுதிகள் தொடர்பான சில சமரசங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
அரசியல் முக்கியத்துவம்: ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தில் தனது பங்களிப்பு இருந்ததாகக் கூறி வரும் டிரம்ப், தற்போது உக்ரைன் போரையும் முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், வரவிருக்கும் காலங்களில் தனது செல்வாக்கை உலக அரங்கில் நிலைநாட்டத் துடிக்கிறார். ஜெலன்ஸ்கியைச் சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் புதினைத் தனது ‘Board of Peace’ அமைப்பில் இணைய அழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





