அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தனது “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (America First) என்ற ஆக்ரோஷமான கொள்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். இம்முறை அவர் குறிவைத்துள்ளது அண்டை நாடான கனடாவைத்தான். அமெரிக்கத் தயாரிப்பு விமானங்களுக்குச் சான்றளிக்க (Certification) கனடா அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதால், கனடாவில் இருந்து வரும் விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது வெறும் வரி விதிப்பு மிரட்டல் மட்டுமல்ல, அண்டை நாடுகளுக்கிடையிலான பல தசாப்த கால வர்த்தக உறவைச் சிதைக்கும் ஒரு மிகப்பெரிய “வர்த்தகப் போர்” (Trade War) தொடக்கமாகும்.
“அமெரிக்க நிறுவனங்கள் கஷ்டப்பட்டுத் தயாரிக்கும் விமானங்களுக்குக் கனடா அரசு அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமெரிக்காவை ஏமாற்ற நினைப்பவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்படும்.
கனடாவின் தயாரிப்பகள் எமது சந்தைக்கு வர வேண்டும் என்றால், அதற்கு அவர்கள் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என டிரம்ப் தனது பிரத்யேக பாணியில் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடி முடிவால், கனடாவின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான ‘பாம்பார்டியர்’ (Bombardier) உள்ளிட்ட பல நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் கனடாவின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால், டிரம்பின் இந்த 50% வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் பயணக் கட்டணங்கள் விண்ணைத் தொடும். மேலும், உதிரிபாகங்கள் விநியோகச் சங்கிலியும் (Supply Chain) கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஏற்கனவே சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளுடன் வர்த்தக மோதலில் ஈடுபட்டுள்ள டிரம்ப், இப்போது கனடாவையும் வம்புக்கு இழுத்திருப்பது உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தால், அது வட அமெரிக்கப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





