உலக அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வாக, உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைனில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மனிதாபிமானச் சூழலைக் கருத்தில் கொண்டு, தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் விடுத்த கோரிக்கையை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது.
“எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க அதிபர் புதின் சம்மதித்துள்ளார். இது ஒரு அமைதிக்கான தொடக்கம்” என்று டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்தப் போரினால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், டிரம்பின் இந்த ராஜதந்திர நகர்வு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக உக்ரைன் மக்கள் மின்சாரம் மற்றும் உணவின்றித் தவித்து வருகின்றனர். இந்த ஒரு வார கால போர் நிறுத்தம், மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். அதே சமயம், இந்த ஒரு வார இடைவெளி நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா அல்லது ரஷ்யா தனது படைகளை மறுசீரமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. எது எப்படியோ, டிரம்பின் தலையீட்டிற்குப் பிறகு போர்க்களத்தில் அமைதி திரும்பியுள்ளது உலக நாடுகளுக்குச் சற்றே நிம்மதியைத் தந்துள்ளது.





