அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (மார்ச் 5, 2026) நாட்டு மக்களிடையே ஆற்றிய உரை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஈரானின் ராணுவக் கட்டமைப்பை அமெரிக்கா சீர்குலைத்து வருவதாக அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
“ஈரான் ஏவுகணைகள் அழிப்பு”: வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், “ஈரானின் ஏவுகணைகளும், ஏவுதளங்களும் அமெரிக்கப் படைகளால் மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போரில் அமெரிக்கா மிகச் சிறப்பாகவும், திட்டமிட்டபடியும் செயல்பட்டு வருகிறது. கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்க மக்களைக் கொன்று குவித்த ஈரானுக்கு இது தகுந்த பதிலடி” எனத் தெரிவித்தார்.
ஒபாமா மீது சாடல்: முன்னாள் அதிபர் ஒபாமாவின் அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்த டிரம்ப், “ஒபாமாவின் அந்தத் தவறான ஒப்பந்தம் தான் ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்க வழிவகுத்தது. ஆபத்தானவர்களின் கையில் அணு ஆயுதம் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதைத்தடுக்கவே இந்த நடவடிக்கை” என்றார்.

“அமெரிக்கா பாதுகாப்பாக உள்ளது”: தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்கா தற்போது பாதுகாப்பான நிலையில் உள்ளது. எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம். ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து உலகைக் காப்போம்” என அதிரடியாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் மற்றும் டிரம்பின் பேச்சு ஆகியவற்றால் கச்சா எண்ணெய் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன், மூன்றாம் உலகப்போர் ஏற்படுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.





