இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை அதிரடியாக மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார். இதில் மிக முக்கிய மாற்றமாக, தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் முரண்பட்டு வந்த நிலையில், இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.என்.ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரின் கூடுதல் பணிகளை கேரள மாநில ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பீகார் மாநில ஆளுநராக சையத் அதா ஹஸ்னைன் மற்றும் நாகாலாந்து மாநில ஆளுநராக ஸ்ரீ நந்த் கிஷோர் யாதவ் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் மாற்றம் என்பது நீண்ட நாட்களாகத் தமிழக அரசியல் கட்சிகளால் கோரப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநரின் வருகை தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான உறவில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


