அழகுமுத்து மாரியம்மன் பொங்கல் விழா:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டையம்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு அழகுமுத்து மாரியம்மன் மற்றும் முத்துக்குமார சாமி கோவிலில் சுற்றுப்பொங்கல் விழா மிக விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலைச் சுற்றி அடி விழுந்து கும்பிட்டுத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
அம்மனுக்கும் முத்துக்குமாரசாமிக்கும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன. திரளான பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்துப் படையலிட்டு அம்மனை வழிபட்டனர். இரவு நேரத்தில் உற்சவ மூர்த்திகள் சிம்ம வாகனத்தில் அமர்ந்து ரதத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா:
இதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள கிணற்றடி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான பணிகள் உற்சாகமாகத் தொடங்கின. இதற்காகத் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் காவிரி ஆற்றிற்குச் சென்ற பக்தர்கள், புனித தீர்த்தம் எடுத்து வந்தனர்.
மாலை வேளையில் மேளதாளங்கள் முழங்கத் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் தட்டு வரிசைகளுடன் சாமி தரிசனம் செய்து வழிபாட்டில் கலந்து கொண்டனர். இந்த அடுத்தடுத்த ஆன்மீக நிகழ்வுகளால் சட்டையம்புதூர் கிராமமே பக்தி பரவசத்தில் மூழ்கியுள்ளது.


