நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர் மு. ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட சார்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வேலுமயில் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற பழங்களையும் எலுமிச்சைச் சாறையும் வழங்கினார்.
மேலும், நாமக்கல் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் லலிதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்கள் கோடைக்காலங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் சென்று நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதிக அளவில் தண்ணீர் அருந்தி பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் “வெப்ப அலை” என்பது மனிதர்களின் உடல்நலத்திற்கும் இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான காலநிலை மாற்ற விளைவு என்பதால், மாணவ மாணவியர் அனைவரும் வெப்ப அலை பற்றிய விழிப்புணர்வுடன் இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ மாணவியர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டும் வெப்ப அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளரும் வெப்ப அலை செயல்திட்ட ஒருங்கிணைப்பாளருமான வெஸ்லி மற்றும் காலநிலை கல்வி திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.


