தமிழக நகைப்பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பேரிடியாக இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15,050 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,400 என்ற இமாலய விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயைத் தாண்டியிருப்பது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடீர் விலை உயர்வுக்கு சர்வதேசச் சந்தையில் நிலவும் இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றமே மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கத்தால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது உலக முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து விலை எகிறியுள்ளது.
குறிப்பாக, 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவது, வரவிருக்கும் திருமண சீசன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. நகைக்கடைகளில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளதோடு, பழைய தங்கத்தை மாற்ற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சவரன் தங்கம் ஒன்றரை லட்சம் ரூபாயைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிப்பது பொதுமக்களிடையே மேலும் கவலையை உருவாக்கியுள்ளது.


