மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், இந்தியா தனது இறக்குமதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தியுள்ளதால் எவ்விதப் பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட இரண்டு பிரம்மாண்ட கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்கள் (Odune மற்றும் Matari) தற்போது இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. சுமார் 1.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து வரும் இந்தக் கப்பல்கள், விரைவில் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும். இது இந்தியாவின் எரிபொருள் இருப்பை மேலும் வலுப்படுத்தும் என அரசு கூறியுள்ளது.
மேலும், எல்பிஜி சிலிண்டர் விலை குறித்தும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது உண்மையான விலையேற்றத்தில் பாதியளவு கூட இல்லை என்றும், மீதி சுமையை அரசே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் எல்பிஜி விலை மிகவும் குறைவாகவும், சாமானியர்களுக்கு எட்டும் வகையிலும் உள்ளது.
குறிப்பாக உஜ்வாலா (Ujjwala) திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதால் அவர்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது. “இந்தியாவிடம் 50 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது; எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்” என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


