திமுக மாணவர் அணியில் முதல் பெண்மணி!! ராஜீவ் காந்தியின் திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன??

சட்டமன்றத் தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில் திமுகவில் மாணவர் அணி பொறுப்பில் செய்யப்பட்ட திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது இடத்தில் ஈரோட்டைச் சேர்ந்த வீரமணி மாணவரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் திமுக மாணவரணியின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, 2021ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த பிறகு விரைவாக முக்கிய பொறுப்புகளை பெற்றார். முதலில் ஊடகப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் மாணவரணி செயலாளராக உயர்த்தப்பட்டார். ஊடக விவாதங்கள் மற்றும் அரசியல் கருத்துகளால் கட்சிக்குள் தனித்த கவனம் பெற்றவர் என்ற நிலையும் இருந்தது.

மாணவரணி செயலாளராக இருந்த காலத்தில் மாநிலம் முழுவதும் மாணவர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கல்லூரி வாயில் கூட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஓராண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு அவர் வெளியிட்ட பதிவு வெளியாகிய சில மணி நேரங்களிலேயே பதவி மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியானது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பது, மாணவர் அமைப்பில் புதிய அணுகுமுறையை கட்சி முன்னிறுத்துகிறது என்ற வகையில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தேர்தல் அரசியலிலும் கவனம் ஈர்த்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram