மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரணமான போர்ச் சூழல் மற்றும் விமான நிலையங்கள் அடிக்கடி மூடப்படுவதால், வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களைப் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இன்று (மார்ச் 14, 2026) ஒரே நாளில் 80 விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளன.
இதில் 18 விமானங்கள் வழக்கமான அட்டவணைப்படி (Scheduled) ஜித்தா மற்றும் மஸ்கட் நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 62 விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சிறப்பு விமானங்களாக (Non-scheduled) இயக்கப்பட உள்ளன.
குறிப்பாக, டெல்லி, மும்பை, கோழிக்கோடு, மங்களூரு மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து இந்த விமானங்கள் ஜித்தா, மஸ்கட், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் இந்தியர்களை ஏற்றி வரவுள்ளன. துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற நகரங்களில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 52,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலிருந்து வெற்றிகரமாக அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், இன்றைய இந்த 80 விமானச் சேவைகள் எஞ்சியுள்ள பயணிகளுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. விமான நிலையங்களில் நிலவும் நெரிசல் மற்றும் ஸ்லாட் (Slot) வசதிகளைப் பொறுத்து இந்த விமானங்களின் நேரம் மாறுபடலாம் என்பதால், பயணிகள் விமான நிறுவனங்களின் இணையதளம் மற்றும் உதவி எண்களைத் (Helplines) தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


