முட்டை விலை குறைய வாய்ப்பா?? 6 கோடி முட்டைகள் தேக்கம்.. ஏற்றுமதியில் பேரிடி!!

namakkal-egg-export-stalled-gulf-war-tension-6-crore-eggs-stuck-port-2026

தென்னிந்தியாவின் முட்டை உற்பத்திக் கூடமான நாமக்கல் மண்டலத்தில், தினமும் சுமார் 7.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் ஒரு பெரும் பகுதி ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் செங்கடல் மற்றும் வளைகுடா கடல் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பல சரக்குக் கப்பல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் நேரடி எதிரொலியாக, நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 100 கண்டெய்னர்கள் பல்வேறு துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளன. இந்த கண்டெய்னர்களில் மட்டும் ஏறத்தாழ 6 கோடி முட்டைகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முட்டைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நுகர்வோரைச் சென்றடைய வேண்டிய அழுகும் பொருள் என்பதால், இந்தத் தேக்கம் பண்ணையாளர்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

“ஏற்கனவே கோழித் தீவன விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த ஏற்றுமதி முடக்கம் இடியாக வந்து இறங்கியுள்ளது” என நாமக்கல் மண்டலப் பண்ணையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தச் சூழல் நீடித்தால், ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த முட்டைகள் அனைத்தும் உள்ளூர் சந்தைக்குத் திருப்பிவிடப்படலாம் என்றும், அதன் காரணமாகத் தமிழகத்தில் முட்டையின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் கணித்துள்ளனர். மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு மாற்று வழிகள் மூலம் ஏற்றுமதியை உறுதி செய்ய வேண்டும் எனப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram