நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஹேந்ரா பொறியியல் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழா, கடந்த மார்ச் 14 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி. பாரத்குமார் தலைமை தாங்கி, விழாவினைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (IIST) துணைவேந்தர் பேராசிரியர் குருவில்லா ஜோசப் கலந்து கொண்டார். அவர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 24 தங்கப்பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். மேலும், மொத்தம் 1100 மாணவ, மாணவியர்களுக்குப் பொறியியல் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “பட்டம் பெற்ற பிறகுதான் உண்மையான வாழ்க்கை தொடங்குகிறது.
கல்லூரிப் படிப்புடன் கற்றல் முடிந்துவிடுவதில்லை; வாழ்க்கை முழுவதும் புதிய திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். சமூக நுண்ணறிவு, விடாமுயற்சி மற்றும் நற்பண்புகள் ஒரு மனிதனை உச்சாணிக் கிளைக்குக் கொண்டு செல்லும். சமூக முன்னேற்றத்திற்காக மாணவர்கள் புதிய ஆய்வுகளிலும், கண்டுபிடிப்புகளிலும் ஈடுபட முன்வர வேண்டும்” என உத்வேகமூட்டினார். முன்னதாக கல்லூரி முதல்வர் ரமேஷ் ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில் கல்லூரியின் செயல் இயக்குநர் சாம்சன் ரவீந்திரன், புல முதல்வர்கள் சண்முகம், நிர்மலா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




