தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் வேளையில், தடையின்றி வாக்களிக்கத் தேவையான விதிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே, அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip / Booth Slip) வீடு வீடாக வழங்கப்படும்.
இந்தச் சீட்டில் உங்களது பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்குச்சாவடி மையம் குறித்த விவரங்கள் இருக்கும். இருப்பினும், இந்தச் சீட்டு மட்டுமே ஓட்டுப் போடப் போதுமானது அல்ல. வாக்களிக்கச் செல்லும்போது உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வாக்காளர் அடையாள அட்டை (EPIC) கொண்டு செல்வது கட்டாயமாகும்.
ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிக்கலாம். இதில் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை (Pension Document), மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (MNREGA) அடையாள அட்டை போன்றவை அடங்கும். மிக முக்கியமாக, வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பது அவசியம். பெயர் இல்லையென்றால் எந்த ஆவணம் இருந்தாலும் வாக்களிக்க முடியாது.
மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) பிரிவு 20A-இன் கீழ் பதிவு செய்திருந்தால், அவர்கள் ஓட்டுப் போட வரும்போது தங்களது அசல் பாஸ்போர்ட்டை (Original Passport) மட்டுமே அடையாளமாகச் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட்டின் நகலோ அல்லது பிற அடையாள அட்டைகளோ NRI வாக்காளர்களுக்கு அனுமதிக்கப்படாது எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றி, ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.


