ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்தப் போருக்கான நிதி மேலாண்மை குறித்து அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) முக்கிய விளக்கமளித்துள்ளார். “ஈரானுடனான போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிதி அமெரிக்காவிடம் தாராளமாக உள்ளது.
இதற்காக அமெரிக்க மக்களுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படாது” என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். பென்டகன் தரப்பில் கோரப்பட்டுள்ள சுமார் 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை (Supplemental Funding) ஒதுக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நிதி அமைச்சரின் இந்தப் பேச்சு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராணுவ ரீதியான தாக்குதல்கள் ஒரு பக்கம் இருக்க, ஈரானை நிதி ரீதியாகவும் முடக்க அமெரிக்கா புதிய வியூகத்தை வகுத்துள்ளது. ஈரானின் வருவாய் ஆதாரங்களாக இருக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சர்வதேசப் பணப் பரிவர்த்தனைகளை முழுமையாக முடக்கும் வகையில் புதிய மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அமல்படுத்த உள்ளது.
குறிப்பாக, ஈரானின் நிழல் உலக எண்ணெய் வர்த்தகத்தைத் (Shadow Fleet) தடுத்து நிறுத்துவதன் மூலம், அந்த நாடு போருக்கான நிதியைத் திரட்டுவதை முறியடிப்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். “ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிப்பது 50 கால அமைதிக்கு வழிவகுக்கும், அதற்குச் செலவிடப்படும் தொகை ஒரு பெரிய விஷயமல்ல” என ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த ‘பொருளாதாரக் கழுத்தை நெரிக்கும்’ நடவடிக்கை, ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


