மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் உலக நாடுகளை பதறவைத்துள்ள நிலையில், இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இந்த உரை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து முக்கிய விளக்கங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சுற்றியுள்ள பதற்றம் காரணமாக, சர்வதேச எரிபொருள் சந்தை அதிர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்கள் இந்தியாவையும் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழலில், நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவசர ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில்,
எரிபொருள் விநியோகத் தடைகளைத் தவிர்க்க மாற்று வழிகள்
சர்வதேச வர்த்தக பாதைகள் பாதுகாப்பு
இந்தியர்களின் பாதுகாப்பு
விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
என பல முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்பதால், இந்திய கடற்படையின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலை உலகம் முழுவதும் கவனித்து வருகிறது, இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பாராளுமன்ற உரையில்,
எரிபொருள் தட்டுப்பாடு வருமா?
விலை உயர்வை எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்கள்?
இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை என்ன?
என்பவற்றுக்கு தெளிவான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


