ஐபிஎல் 2026 (IPL 19th Edition) தொடர் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சிச் செய்தி கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனி, காலில் ஏற்பட்ட பலமான தசைப்பிடிப்பு (Calf Strain) காரணமாகத் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இதன்காரணமாக, இந்த சீசனின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் தோனி விளையாட வாய்ப்பில்லை என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தோனி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வந்த நிலையில், இன்று காலை வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
தோனியின் இந்தத் திடீர் விலகலால், வரும் மார்ச் 30-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள சிஎஸ்கே-வின் முதல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான முக்கியமான மோதல்களையும் அவர் தவறவிட வாய்ப்புள்ளது. தோனிக்கு பதிலாகச் சமீபத்தில் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார் எனத் தெரிகிறது.
44 வயதான தோனி, இதுவே தனது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் எனக் கருதப்படும் சூழலில், ஆரம்பத்திலேயே காயம் காரணமாக அவர் விலகியது சிஎஸ்கே-விற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. “தல விரைவில் குணமடைந்து மைதானத்திற்குத் திரும்ப வேண்டும்” என ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் #GetWellSoonThala என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தோனியின் வழிகாட்டுதல் இல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் பொறுப்பை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதே இப்போதைய பெரிய கேள்வி.




