பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்” பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம் ஒற்றைப் பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு ரூ.50,000 டெபாசிட் செய்யப்படும்; இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும்.
இந்த தொகை குழந்தையின் பெயரில் தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனில் வைப்பாக வைத்து, 18 வயதில் அந்தத் தொகையை வட்டி சேர்த்து பெற்றுக் கொள்ள முடியும். இது பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு எதிர்கால நிதி பாதுகாப்பை வழங்கும். மேலும், 6 வயதில் இருந்து ஆண்டுக்கு ரூ.1800 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இது பெண் குழந்தைகளின் கல்வி செலவுக்கு துணையாக இருக்கிறது. கல்வி தொடரவும், சுயநினைவுடன் வளரவும் இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான முக்கிய நிபந்தனைகள்: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்திருக்க வேண்டும். பள்ளி சேர்க்கை, இடைநிலைக் கல்வி, பாலின சமத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்த திட்டத்தை விண்ணப்பிக்க, அருகிலுள்ள ஈ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தமிழக அரசின் இந்த அறிவிப்பை பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.