ஜூன் ஐந்தாம் தேதி இன்றைய எபிசோட்டின் முதலில் அண்ணாமலை முத்து காலையிலேயே ஏன் குடித்து வருகிறான் என்று கேள்வி எழுப்ப, அதற்கு மீனா அவளது தங்கை சீதா மற்றும் அவரது காதல் குறித்து எடுத்துரைக்கிறார். அதனைக் கேட்ட அண்ணாமலை சீதா படிச்ச பொண்ணு. அவள் நல்லதா தான் முடிவு எடுத்து இருப்பாள். முத்து யாரிடம் தகராறு ஏற்பட்டாலும், இப்படித்தான் தொடர்ந்து ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பான். நான் அவனிடம் எடுத்து சொல்றேன் என்று மீனாவுக்கு அண்ணாமலை ஆறுதல் கூறுகிறார். ஆனால் மீனா அவரை தடுத்து வேண்டாம் மாமா! நீங்க எடுத்துச் சொன்னீங்கன்னா அவரு என் மேல தான் கோபப்படுவாரு என்று தடுத்து விடுகிறார். நானே நல்ல சமயம் பார்த்து எடுத்து சொல்றேன் மாமா! என்று சொல்லிவிட அண்ணாமலையும் சரி என்று சென்று விடுகிறார். அதனைத் தொடர்ந்து விஜயா வந்து அதை போல் கேள்வி எழுப்ப, மீனா எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி மழுப்பி விடுகிறார். அந்த சமயத்தில் முத்து மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்குள் வருகிறார். அவரைக் கண்ட விஜயா இங்கே என்ன நடந்துக்கிறது? என்று கேட்க, முத்து வழக்கம் தவறாது நான் தான் நடந்து கொண்டிருக்கிறேன் என்று கிண்டல் அடிக்கிறார். அதைக் கேட்டு கடுப்பான விஜயா, ஆக்ரோசமாக திட்டிக் கொண்டே இருக்க அச்சமயம் மனோஜ் வாயில் கட்டுடன் ரோகினி உடன் வீட்டிற்குள் நுழைகிறார்.
அவரைக் கண்ட விஜயா என்னடா ஆச்சு என்று பதற, ரோகிணி அவர் கீழே விழுந்துட்டாரா அதான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன் என்று கூறுகிறார். என்னை கூப்பிட வேண்டியதுதானே என்று விஜயா கேட்க அதற்கு மனோஜ் வாயில் கட்டி இருப்பதால் சைகை மூலம் விஷயத்தை சொல்ல முயலும் போது, ரோகினி தலையிட்டு நான் இரவு தூங்கும் போது விழுந்துட்டேன். அந்த நேரத்துல உங்களையா கூப்பிட முடியும்! அதான் ரோகினி இருக்கா இல்ல எனக்கு! என்று மனோஜ் கூறுவதாக சொல்கிறார். இதனை கேட்ட விஜயா ஆத்திரத்தில் மனோஜை திட்ட, மனோஜ் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார். ஒருபுறம் சாப்பாடு வைத்துவிட்டு சீதாவின் அம்மா சீதாவை சாப்பிட வருமாறு அழைக்கிறார். அவர் கூப்பிட கூப்பிட சீதா படுத்து கொண்டே இருக்கிறார். அருகில் சென்று தொட்டுப் பார்த்தால் உடம்பு கொதித்து மயக்கத்தில் கிடக்கிறார். பதறி மீனாவின் அம்மா மற்றும் சத்தியா சீதாவை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்கின்றனர். இவர்கள் ஆட்டோவில் செல்வதை கண்ட அருண் அவர்களை பின்தொடர்ந்து மருத்துவமனை வந்தடைகிறார். மீனாவின் அம்மா மீனாவிற்கு போன் செய்து அவரை அங்கு வருமாறு அழைக்கிறார். ஓடி வந்த மீனா மற்றும் முத்து எதிரே மருந்து வாங்கி வரும் அருணை சந்திக்கின்றனர். முத்து அருணை கண்டதும் மீண்டும் வாதத்தில் ஈடுபட்டு இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இத்துடன் இந்த எபிசோடு முடிகின்றது.