குஜராத்: அகமதாபாத்விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-171),நேற்று பிற்பகல் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து பெரும் வெடிப்புடன் விபத்துக்குள்ளானது. இந்த பரிதாபமான விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒரே ஒரு பயணி உயிருடன் மீட்கப்பட்டார் என்ற தகவல் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்ததாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பயணிகளுள் 169 பேர் இந்தியர், 53 பேர் பிரிட்டிஷ் பிரஜைகள், 7 பேர் போர்ச்சுக்கலை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. விமானத்திலிருந்து அனைவரும் உயிரிழந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் என்ற பிரிட்டன் குடியுரிமை பெற்ற பயணி, விபத்திலிருந்து அற்புதமாக உயிர் பிழைத்துள்ளார்.
அவரது கண்கள், மார்பு மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்குப் பின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்தியாவில் உள்ள தனது குடும்பத்துடன் விடுமுறையை கழித்துவிட்டு, லண்டன் திரும்பிக்கொண்டிருந்த வேளையே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அகமதாபாத் காவல் ஆணையர் மாலிக் கூறும்போது, “இதுவரை 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றன. விபத்துக்குள்ளான இடம் முழுவதும் பாதுகாப்பு வலையமைப்பில் கொண்டு வந்துள்ளோம்,” என்றார். இந்த விமானத்தில் பயணித்தவர்களில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தொடக்க தகவல்கள் கூறினாலும், அவரது மரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.