தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன் அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க. தனது வாக்குறுதிகளை நியாயமாக நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் கல்லூரிகள் அதிகமாக உள்ள மாவட்டம் கோவை. இங்கு தற்போது கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கம் வேகமாக அதிகரித்து வந்து கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக கோவையில் ஒரு போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் திறக்க வலியுறுத்த உள்ளோம்,” என்றார் அண்ணாமலை. அண்மையில் இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதை அண்ணாமலை நினைவூட்டினார். “நாம் கொரோனா காலத்திலும் நமது இலக்கை நோக்கி சென்றோம். இந்தியா வேகமாக வளரும் நாடாகவும், பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது.
ஆனால் மாநில அரசு, மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்தாமல் முடக்க முயற்சிக்கிறது என்று திமுக அரசை தாக்கியுள்ளார்.
அதேபோல் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. தமிழகம் அனுப்பும் ஒவ்வொரு ரூபாயையும், மத்திய அரசு திருப்பிக் கொடுத்து வருகின்றது” எனவும் தெரிவித்துள்ளார். “பா.ஜ.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். உயிருள்ள வரை இந்த கட்சியின் வளர்ச்சிக்காகவே உழைப்பேன். சில நேரங்களில் பேச வேண்டிய இடங்களில் பேசுகிறேன்; பேசக்கூடாத இடங்களில் அமைதியாக இருக்கிறேன். உறுதியாக தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார். “கூட்டணியில் எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம். பொருந்தும் கூட்டணி, பொருந்தாத கூட்டணி என இருபெரும் வகைப்படும். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி எதிர்காலத்தில் மீண்டும் பொருந்தும் கூட்டணியாக மாறும்,” என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்திருந்தார்.





