திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 18 வயது மாணவி ஸ்ரேயா என்பவர் குளியலறையில் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்திற்கு உள்ளாக்கியது. சமீப காலமாக இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து விலகி கொள்ள தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டதன் விளைவாக திடீர் மரணங்கள் ஏற்படுவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
அதாவது வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் திடீரென மயங்கி விழுவது, நடந்து கொண்டிருக்கும் போது திடீரென இதயத்தின் செயல்பாடு நின்று மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா மாநிலம் பாலக்காடுக்கு அருகே உள்ள சித்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட போல்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன் என்பவர். அவருக்கு ஸ்ரேயா என்ற 18 வயது ஆகும் மகள் உள்ளார்.
தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தன் படிப்பினை தொடர்வதற்காக கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விண்ணப்பிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிகள் திறக்க சில தினங்களில் இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரேயாவின் கதறல் கேட்டு ஓடி வந்து தாயார் அதிர்ந்து போய் பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையின் போது மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிர் பிரிந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும், உடற்கூறு ஆய்வில் திடீரென ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக மரணம் அடைந்திருக்கலாம் என்று பெற்றோரிடம் கூறப்பட்டது. பிறந்தநாள் அன்று மாணவி இறந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





