திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடந்த ஒரு மன வருத்தத்துக்குரிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக நோயால் தவித்த தாயின் துடிப்பைக் காண முடியாமல், மன அழுத்தத்தில் தத்தளித்த மகன் தன் தாயையே கொன்றுள்ளார். தாராபுரத்தைச் சேர்ந்த 72 வயதான செல்லத்துரை, விவசாயம் செய்து வருகிறார். அவரது மனைவி மாரியம்மாள் (70) கடந்த சில வருடங்களாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக படுக்கையிலேயே இருந்துள்ளார். அவர்களுக்கு ராஜகோபால் (40) என்ற மகன் ஒருவர் உள்ளார். தாயை பராமரிப்பதும் கவனிப்பதும் அனைத்து செலவுகளும் இவரை பார்த்து வந்துள்ளார். மாரியம்மாளின் நிலை மேலும் மோசமடைந்ததால், அவர் அவ்வப்போது வலியால் அலறி சத்தம் போடுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையை தொடர்ந்து அனுபவித்த ராஜகோபால், கடும் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவரது தங்கை ஏசம்மாள் வீட்டிற்கு வந்து தாயை பார்த்தபோது, அவர் தனது அவல நிலையை கூறி கண்கலங்கியதாகவும், இதனை தாங்க முடியாமல் ஏசம்மாள் வெளியே சென்று அமர்ந்திருக்க, சற்று நேரத்தில் தாயின் அலறும் சத்தம் மீண்டும் கேட்டதும் உள்ளே ஓடி வந்தார். அப்போது மாரியம்மாள் ரத்தத்தில் மிதந்து பரிதாபமாக கிடந்துள்ளார். அருகே கத்தியுடன் ராஜகோபாலன் நின்றிருந்தார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஏசம்மாள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ராஜகோபாலனையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், “தாயின் தினசரி துடிப்பும் சத்தமும் என்னால் தாங்க முடியவில்லை; மன அழுத்தம் காரணமாகவே இந்த செயலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.