அகமதாபாத்: சமீபத்தில் அகமதாபாத் அருகே ஏற்பட்ட விமான விபத்தில் பயணிகள் உயிரிழந்த சம்பவம், நாட்டை உலுக்கியுள்ளது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட பலர் உயிரிழந்தனர். தற்போது வரை, 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 76 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்களின் மரபணு (DNA) அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஜய் ரூபானியின் உடல், அரசு மரியாதையுடன் ராஜ்கோட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது வீட்டிலும், நகரத்தின் முக்கிய சாலைகளிலும் மக்கள் பெருமளவில் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில ஆளுநர், மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உயிரிழந்த ஒவ்வொரு பயணியின் குடும்பத்துக்கும் ₹25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். அதே நேரத்தில், காயமடைந்த பயணிகளுக்கு உயர் மருத்துவ வசதிகள் இலவசமாக அளிக்கப்படும். இந்த நிதி உதவியைச் சிறப்பாக கண்காணிக்க ஒரு மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பிளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) மற்றும் விமானிகள் குரல் பதிவு கருவி (CVR) இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. இவை விபத்தின் நேரத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை அளிக்கவுள்ளது.
இந்திய விமான விபத்து புலனாய்வு அமைப்புடன் (AAIB) இணைந்து, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) நிபுணர்களும் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் விமான பயணத்தின் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் பயணிகள் மற்றும் விமானத்துறையினரிடையே விழிப்புணர்வு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஆய்வுகள், பயிற்சி நடவடிக்கைகள், மற்றும் விமான பராமரிப்பு விதிகள் மீண்டும் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





