இந்த ஜூலை மாதம் ஜப்பானில் பன்முகமான நிகழ்வுகள், பாரம்பரிய விழாக்கள் மற்றும் சர்வதேச மாநாடுகள் நடைபெறவிருக்கின்றன. ஆனால், சமூக ஊடகங்களில் பரவும் சில வதந்திகள், குறிப்பாக ஜூலை 5ஆம் தேதி பேரழிவு ஏற்படும் என கூறப்படும் ரியோ டாட்சுகி என்பவரின் கணிப்புகள், சுற்றுலா பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.’புதிய பாபா வாங்கா’ என அழைக்கப்படும் ரியோ டாட்சுகி, 2021ல் வெளியான The Future I Saw என்ற மங்கா காமிக்கில், ஜூலை 5 அன்று ஜப்பானில் பெரிய பேரழிவு ஏற்படும் எனக் கூறியிருந்தார். இதனால் ஹாங்காங், சீனா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50% முதல் 83% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது, கொரோனாவுக்குப் பிறகு மீண்டு நிற்க முயற்சிக்கும் ஜப்பான் சுற்றுலாத் துறைக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால், இதற்கான எந்தவொரு அறிவுப்பூர்வ எச்சரிக்கையோ, புவியியல் ஆதாரமோ எதுவும் இல்லை என்பது முக்கியம்.
ஜப்பானில் நடைபெறும் முக்கிய விழாக்கள்
Gion Matsuri – கியோட்டோ ஜப்பானின் மிகவும் பிரபலமான பாரம்பரிய விழா. ஜூலை முழுக்க நடைபெறும் இந்த விழாவில், பிரம்மாண்டமான வாகன ஊர்வலங்கள், பாரம்பரிய உடைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
Tenjin Matsuri – ஓசாகா இந்த விழா ஜப்பானின் முக்கியமான படகுப் பவனிகளில் ஒன்றாகும். ஆற்றில் ஒளி விளக்குகளுடன் செல்லும் படகுகள், இசை மற்றும் நாகரிகக் கலாசாரக் காட்சி என்பவை இதற்கான சிறப்புகள்.
Sumida River Fireworks – டோக்கியோ ஜூலை இறுதியில் நடைபெறும் பட்டாசு நிகழ்ச்சி, வருடத்திற்கு ஒருமுறை லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் விழா.
ஜப்பான் அரசு, இந்த வகையான வதந்திகளை முற்றிலுமாக நிராகரித்து வருகிறது. மியாகி மாகாண ஆளுநர் யோஷிரோ முராய் கூறியதாவது:
“நாட்டின் மக்கள் வழக்கம்போல் வாழ்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு எதற்கும் பயப்பட தேவையில்லை. உண்மை ஆதாரமற்ற கணிப்புகளை நம்பவேண்டாம்.”
ஜப்பான் உலகிலேயே மிக மேம்பட்ட புவியியல் கணிப்பு, பேரழிவு தடுப்பு மற்றும் மீட்பு கட்டமைப்புகளை கொண்ட நாடாகும். எந்தவொரு சாத்தியமான பேரழிவும் ஏற்பட்டாலும், அதற்கு முன்பே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.