சென்னை: வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 சென்டிமீட்டர் அளவு வரை மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவித்தது. அதன்படி பார்சன் வேலி 10 மேல் பவானி மற்றும் போதிமுண்டு ஆகிய இடங்களில் தலா 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கல்லார், வால்பாறை போன்ற பகுதிகளில் தலா 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சோலையார் பகுதியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு வங்கம் மற்றும் தென்மேற்கு வங்கதேசம் ஒட்டியும் காணப்படுகிறது. அடுத்த கட்டமாக 24 மணி நேரத்தில் இந்த மேலடுக்கு சுழற்சியானது வலுவடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்பட்டாலும் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். அவ்வப்போது இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வலியுறுத்தியுள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள கடலோரப் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.