சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எந்த விதத்திலும் வெளியிடக் கூடாது என போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நீதிபதி வேல்முருகன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விவரங்களும் இடம் பெற்று இருந்தது தெரியவந்தது. விவரங்கள் இருப்பதை பார்த்த நீதிபதி கூறியதாவது, “பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை எந்த விதத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்றும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவது இல்லை” என்றும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம் வேண்டும். இதுபோன்ற வழக்குகளை பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் மற்றும் பெயர்கள் எந்த விதத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல்துறையினர் டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் உத்திரவிட்டார்.
இந்த உத்தரவை மீறினால் காவல்துறையினர் பொறுப்பு என்றும், நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். இதன் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை நீக்க வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்ததை சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.