மதுரை நகரம் இன்று பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை (ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு, ஆன்மிக உணர்வை தீவிரமாக கூட்டி வருகிறது. இந்து முன்னணி சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில், முருக பக்தர்களுக்கு ஒரு அதிசய அனுபவமாக அறுபடை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகனின் அறுபடை வீடுகள் திருத்தணி, சுவாமிமலை, பழனி, திருச்செந்தூர், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் –இவை அனைத்தும், தத்ரூபமான வடிவத்தில், அலங்கரிக்கப்பட்டு, வேல்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்திற்கு வந்த பக்தர்கள் உண்மையில் அந்த இடங்களையே நேரில் காணும் உணர்வைப் பெற்றுவிடுகின்றனர். பூஜைகள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படுகின்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. குழந்தைகள் முருக வேடத்தில் வரும் காட்சி, கலைநிகழ்ச்சிகள், திருப்புகழ் பாடல்கள் ஆகியவை திருவிழாவை இன்னும் சிறப்பாக்குகின்றன. மாநாடு நடைபெறும் திடலில் 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் பக்தர்களுக்கான இருக்கை வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தருகின்றனர். தன்னார்வலர்கள், கூட்டத்தையும் வாகனங்களையும் ஒழுங்குபடுத்தி, தண்ணீர், பிரசாதம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாநாட்டில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். ஒரு மேடையிலேயே திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் மற்றும் முருக பக்திப் பாடல்கள் ஒப்பேற்று ஒரே நேரத்தில் பாடப்படும். மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் கட்டாயம் என்பது குறித்து எழுந்த சர்ச்சையில், உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. வாகனங்களுக்கான பாஸ் தேவையில்லை என தெரிவித்த நீதிமன்றம், அதே நேரத்தில் வாகன ஆவணங்களை போலீசார் சரிபார்த்து அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. வாகனக் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், பதிவு சான்று போன்றவை கட்டாயமாக பரிசோதிக்கப்பட வேண்டும். இதனால் பக்தர்களுக்கு அனுகூலமாகவும், பாதுகாப்பு முறைப்படியாகவும் செயல் திட்டம் அமைந்துள்ளது.”ஒரே இடத்தில் அறுபடை வீடுகள் என்பதை காணும் போது மனதில் பரவசம் ஏற்படுகிறது. உண்மையிலேயே முருகனை நேரில் தரிசிப்பது போல் உள்ளது” என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.