புவனேஸ்வர்: ஒடிசாவில் கலப்பு திருமணத்தால் பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டை அடித்து சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள காசிபூர் பிளாக் பைகனகுடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து உள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு இருந்தது. பெண்ணின் சமுதாயத்தைப் பொறுத்தவரை மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை காதலிக்க கூடாது என்பது தான் விதிமுறையாக வகுக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள் கூறியவற்றை மீறி மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை இளம் பெண் காதலித்துள்ளார். காதலித்தது மட்டுமல்லாமல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் வாழ்ந்தால் ஒன்றாக வாழ வேண்டும் இல்லை என்றால் இருவரும் சேர்ந்து சாகலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதன்படி இருவரும் கிராமத்தை விட்டு சென்று விட்டனர். குடும்பத்தினருக்கு தகவல் தெரிய வந்தது.
பெண்ணின் குடும்பத்தை சார்ந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர் அந்த சமுதாயத்தினர். ஊராருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் குடும்பத்தினர் அனைவரும் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்றும், மொட்டை அடித்தால்தான் கலப்பு திருமணம் செய்த பெண்ணின் பாவங்கள் தீரும் என்றும், மொட்டை அடித்தால் தான் கிராமத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்வோம் இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் கிராமத்தை விட்டு ஒதுங்கியே இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
வேறு வழியில்லாமல் குடும்பத்தினரும் மொட்டை அடித்துக் கொண்டுள்ளனர். கோவிலில் கால்நடை பலி பூஜை கொடுத்துவிட்டு பின் இளம் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 40 பேர் மொட்டை அடித்து பின் குளித்துவிட்டு கிராமத்திற்கு அனுமதித்துள்ளனர். வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வழக்கு தொடர காசிப்பூர் பிளாக் வளர்ச்சி அதிகாரி விஜய் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.





