கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மகப்பேறு உதவிக்காக சிறுமிகளின் வயதை மாற்றி போலி ஆதார் கார்டை தயாரித்தது தொடர்பாக இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் வட்டமுகிலாலும் பகுதியை சேர்ந்த சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும், இரு சிறுமியர்களும் கர்ப்பம் அடைந்த நிலையில் 16 வயதான இருவருக்கும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்யும் போது போலி ஆதார் கார்டுகளை பயன்படுத்தி உறவினர்கள் கொடுத்துள்ளனர்.
இதற்காக தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் கடை வைத்திருந்த முகமது ஜலால் உல்லா என்பவரை தொடர்பு கொண்டு பிறந்த ஆண்டை மாற்றி போலியான ஆதார் கார்டு தயாரித்துள்ளனர். மேலும், போலி ஆதார் கார்டு பயன்படுத்தி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பதிவு செய்யப்பட்டு மகப்பேறு உதவித்தொகை பெற்றதாக தெரியவந்தது.
ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக ஆதார் கார்டு போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் ரஞ்சித் வயதை மாற்றி கொடுத்தது உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. தகவல் அறிந்த கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஜலால் உல்லா மற்றும் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் ரஞ்சித் ஆகியோரை கைது செய்து விசாரித்துள்ளனர். மேலும் இந்த போலி ஆதார் கார்டை செய்ய தூண்டி விட்ட உறவினர்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தை தேடி வருகின்றனர் போலீசார்.