2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் ஆயத்தங்களை வேகப்படுத்தியுள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்பட வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், முழு நேர அரசியல் திட்டமிடலில் பிஸியாகி உள்ளார் விஜய். பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் தான் விஜயின் அரசியல் அறிமுகத்தின் முக்கிய மூலக்கல்லாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பரந்தூரில் நடத்திய நேரடி சந்திப்பு, மக்கள் மனங்களில் அவருக்கு விசேஷ இடத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 13ஆம் தேதி பனையூரில் போராட்டக்குழுவினரை மீண்டும் சந்தித்து, “நான் நிச்சயம் உங்களுடன் இருப்பேன்” என்று உறுதி அளித்தார். இப்போது விஜய் தரப்பில் இருந்து பரந்தூர் போராட்டக் குழுவினரை புதிய கட்டத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்படுகிறது. இதற்காக 1,000 பேர் வரை தயாராக இருக்குமாறு கூறி, முதல்வர் ஸ்டாலினிடம் நேரடி மனு அளிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வேளையில், தமிழக அரசு பரந்தூர் திட்டம் மிகவும் தேவை எனவும், சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் நோக்கில் பரந்தூர் திட்டம் அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் காலத்தில் இது கண்டிப்பாக வேண்டுமா? என பிரதான ஆலோசனை அளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக உள்ளது. இந்த சூழலில், விஜய் 1,000 போராட்டக்காரர்களுடன் நேரடியாக முதலமைச்சரை சந்தித்து அழுத்தம் தர திட்டமிட்டிருப்பது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அப்பாயிண்ட்மென்ட் தருவாரா, அல்லது விஜய் இந்த சந்திப்பை மற்றொரு அரசியல் யுத்தமாக மாற்றுவாரா என்பதே இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது.