பெற்றோரை இழந்து வாழ்க்கையின் நெருக்கடியில் சிக்கிய பாண்டி மீனாவுக்கு தந்தைபோல் நிழலாய் இருந்து திருமணம் செய்து வைத்த பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அன்பின் மூலம் மனங்களை வென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது, பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மீனாவின் குடும்ப நிலைமையை தினேஷ் ஆலிவர் அறிந்தார். பாண்டி மீனாவின் தந்தை நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். தாயும் சிறுநீரக நோயால் உயிரிழந்தார். மனவளர்ச்சி குறைபாடுடைய தங்கையுடன் குடிசை வீட்டில் பாண்டி மீனா மிகவும் கடுமையாக சூழ்நிலையில் வாழ்ந்தார்.
இந்த நிலையை நேரில் பார்த்த தினேஷ் ஆலிவர், அவரது குடும்பத்துக்கு முதலில் வீடு கட்டிக் கொடுத்தார். ரூ.2.40 லட்சம் பிரதமர் வீட்டு திட்டத்திலிருந்து, ரூ.1.50 லட்சம் தன் சொந்த நிதியிலிருந்து, மேலும் லயன்ஸ் சங்கத்தின் உதவியுடன் புதிய வீடு கட்டிக் கொடுத்து, புது வாழ்க்கைக்கு பாதை திறந்தார். வீடு பெற்ற பாண்டி மீனா, “என் அப்பா செய்திருக்க வேண்டியதை சார் செய்துவிட்டார்” எனக் கூறி கண்ணீர் விட்டார். அந்த தருணம் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தியது. தனது பணியிடம் சென்னைக்கு மாறிய பிறகும், தினேஷ் ஆலிவர் பாண்டி மீனாவை தொடர்ந்து கவனித்து வந்தார். திருமணத்தையும் தானே ஏற்பாடு செய்து, சீர்வரிசைகள் விருந்துகள் என அனைத்தையும் செய்து, மணமகனிடம் தாலி எடுத்து கொடுத்து தந்தையாகவே திருமணத்தை நடத்தினார். சீர்வரிசை பொருட்கள், திருமண விருந்து என அனைத்தையும் தன் சொந்த செலவில் செய்து, ஊர் மக்கள், லயன்ஸ் சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து குடும்ப விழாவாக நடத்தினார். நான் வீடு கட்டி கொடுத்த அன்றே நீ என் மகள், இனிமேல் கண்ணீரே இல்லை என்று தினேஷ் ஆலிவர் உறுதி கூற, பாண்டி மீனாவின் கண்களில் மீண்டும் நம்பிக்கையின் ஒளி பிறந்தது. பாண்டி மீனாவின் குடும்பத்தார் மட்டுமல்லாது பேராவூரணி மக்கள் அனைவரும் இந்த மனிதநேய செயலை பாராட்டி வருகின்றனர். அதிகாரிகளும் மனிதர்கள்தான் என்பதை நிரூபித்த இவர், எப்போதும் நிழலாய் நின்ற தந்தைஎன்பது போன்ற அன்பின் அடையாளமாக நிலைத்திருக்கிறார்.