விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் தொழில் பிரசித்தியாக நடைபெற்று வருகிறது. பட்டாசு என்றாலே சிவகாசி தான் என்கின்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அங்கு சின்னகாமன்பட்டி என்கின்ற கிராமத்தில் வழக்கம் போல் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. திடீரென அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் எட்டு தனித்தனி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. சம்பவ இடத்திலேயே எட்டு பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டு இறந்தவர்களுக்கு நாலு லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். எனினும், மக்கள் உரிய பணத்தை வழங்க வேண்டும் என்று மருத்துவமனை முன்னால் உடலை வாங்க மறுத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்து உள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், எத்தனை ஆலைகள் எத்தனை இழப்புகள். இழப்பீடு அறிவிக்கும் முதல்வர் ஒரு முறையேனும் பட்டாசு ஆலைக்கு சென்று நேரில் பார்த்திருந்தால் விபத்து ஏற்படுமா? என்று ஆலை விபத்து குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.





