பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனம் இன்போசிஸில் பெண்கள் கழிப்பறையில் ரகசியமாக வீடியோ எடுத்ததாக தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு வேலை பார்த்து வந்த 28 வயதான சுவப்னில் நாகேஷ் மாலி என்ற இளைஞர், ஹெலிக்ஸ் பிரிவில் சீனியர் அசோசியேட் கன்சல்டன்ட் ஆக இருந்தார். சமீபத்தில் ஒரு பெண் ஊழியர் ரெஸ்ட் ரூமுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான அசைவைக் கவனித்துக் கொண்டிருந்த போது, ஒருவர் தன்னை வீடியோ எடுத்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் கூச்சலிட்டதால் மற்ற ஊழியர்கள் திரண்டு வந்தனர். சந்தேகத்துடன் அந்த இளைஞரை பிடித்து, அவரின் மொபைல் போனை சோதனை செய்த போது, பல பெண்களின் ரகசிய வீடியோ காட்சிகள் இருப்பது தெரிய வந்தது. போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நிறுவனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் வேறு யாரும் தொடர்புடையவர்களா என்பதும் விசாரணையில் கண்டறியப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு பெண்கள் பாதுகாப்பு குறித்து ஐடி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கண்காணிக்க வேண்டும் என்பதே ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.


