அகமதாபாத்: இந்தியாவின் விமான போக்குவரத்து வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை வெளியானது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம் புறப்பட்ட 32 நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கட்டிடத்தில் மோதியதால் ஏற்பட்ட தீவிபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், விமானத்தின் இரு இன்ஜின்களும் நடுவானில் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக எரிபொருள் வழங்கல் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையின் முக்கிய அறிக்கைகள்: எரிபொருளில் எந்தவித கலப்பும் இல்லை.
காலநிலை பாதிப்பு அல்லது பறவை மோதல் சாத்தியமே இல்லை.
விமானிகள் அனுபவமிக்கவர்களும் உடல்நிலைத் தகுதி பெற்றவர்களும்.
சரியான ஓய்வுக்குப் பிறகு தான் பணிக்கு வந்தனர்.
RAT (Ram Air Turbine) அமைப்பை அவசர காலத்துக்கு செயல்படுத்திய முயற்சி தோல்வியடைந்தது. புறப்பட்ட 32 நொடிகள் மட்டுமே விமானம் ஆகாயத்தில் இருந்தது. எரிபொருள் தானாகவே துண்டிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், இது இன்னும் மர்மமாகவே உள்ளது. ஆனால் திட்டமிட்ட சதி வேலைக்கு எந்தவித தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், முழுமையான புலனாய்வு அறிக்கை இன்னும் சில வாரங்களில் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





