சென்னை: பங்குசந்தையில் பொறுமை மிக முக்கியம் என்பதை மீண்டும் உறுதி செய்யும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பம் 1990களில் JSW ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகளை வெறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்து வாங்கி வைத்திருந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் அந்த பங்குகளை அவர்கள் வைத்திருந்ததன் பலனாக, அதன் தற்போதைய மதிப்பு ஏறக்குறைய ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த செய்தியை முதலீட்டாளர் சௌரவ் தத்தா தனது X (முன்பு Twitter) பக்கத்தில் பகிர்ந்தார். அவர் குறிப்பிட்டபடி, “ஒரு நல்ல பங்கு வாங்கி, 30 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தால், அதன் மகத்துவம் இப்படித்தான் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
பங்குசந்தை நிபுணர்கள் இதுபோன்ற சம்பவங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல பாடமாக அமையும் என்று தெரிவித்துள்ளனர். குறுகிய கால லாபத்திற்கு ஏங்கித் தொடர்ந்து வாங்கி விற்கும் டிரேடிங் முறையை விட, நீண்டகால முதலீட்டுதான் மிகப்பெரிய வருமானத்தை தரும் என்பது இதனால் மீண்டும் உறுதியாகிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர். JSW ஸ்டீல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஸ்டீல் உற்பத்தியாளர் ஆகும். தற்போது ஒரு பங்கின் விலை சுமார் ரூ.1004.90 ஆகவும், அதன் மார்கெட் கேப் ரூ.2.37 டிரில்லியனாகவும் உள்ளது. இத்தகைய நீண்டகால முதலீட்டில் பங்கு ஸ்ப்ளிட், போனஸ் மற்றும் டிவிடெண்டுகள் போன்றவை கூடுதலாக வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செய்தி மூலம் நல்ல நிறுவனத்தின் பங்குகளைத் தேர்வு செய்து, நீண்ட காலம் பொறுமையாக காத்திருப்பதன் மூலம் பெரும் லாபம் கிடைக்கும் என்பதையே இது நிரூபிக்கிறது. பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கான முன்பே நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற்று முதலீடு செய்வது நல்லது என்றும் நிபுணர்கள் நினைவூட்டுகின்றனர்.